வாளையாறில் சிக்கிய ரூ.60 லட்சம் ஹவாலா பணம்
கோவையிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் உடையில் கட்டுக் கட்டாக ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கடத்திச் சென்ற இருவரைக் கேரளா கலால் துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாகக் கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை – கேரளா எல்லையான வாளையாறு கலால் சோதனைச் சாவடி அருகே கலால் அதிகாரிகள் மற்றும் போலீசார் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையிலிருந்து கேரள நோக்கி வந்த இருசக்கர வாகனம் ஒன்றை போலீசார் நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பிரபாகரன் மகன் ரதிஷ் (40) மற்றும் பின்னால் அமர்ந்து வந்த மகாராஷ்டிரா மாநிலம் சங்கலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி மகன் சுனில் சிவாஜி (32) ஆகிய இருவரை போலீசார் சோதனையிட்ட போது இருவரும் தங்களது உடலிலும் கட்டு கட்டாக பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் பணத்திற்கான அவர்களிடம் இருந்த ரூ.60 லட்சம் பணத்தைக் கலால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பணம் எங்கிருந்து யாருக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இதனிடையே பிடிபட்ட ரூ.60 லட்சம் பணம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.