கோவையில் ரயில்வே சுரங்கப் பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதி விபத்து..!
கோவை லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப் பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதியதில் இரும்பு ஆர்ச் சேதமடைந்து சாலையில் சாய்ந்தது.
- அடிக்கடி விபத்து ஏற்படுவதால் முறையான எச்சரிக்கை பலகையை வைக்கக் கோரிக்கை
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் சுரங்கப்பாதை மிகவும் தாழ்வாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும் போது சுரங்கப்பாதையில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் சுரங்கப்பாதையின் முன்னாள் ரயில்வே துறை சார்பில் இரும்பு ஆர்ச் வைக்கப்படுகிறது.
இருப்பினும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வரும் கனரக வாகன ஓட்டிகள் அதனைக் கவனிக்காமல் கடக்க முயல்வதால் இரும்பு ஆர்ச் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு லோடுடன் சென்ற லாரி ஒன்று லங்கா கார்னர் சுரங்கப்பாதை இரும்பு அர்ச் மீது மோதி சிக்கியது. இதனால் இரும்பு ஆர்ச் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் ரயில்வே துறையினர் பொக்லின் இயந்திரம் மூலம் இரும்பு ஆர்ச்சை அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது: லங்கக்கார்னர் சுரங்கப்பாதை தாழ்வாக இருப்பதால், அங்கு இரும்பு ஆர்ச் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இங்கு வைக்கப்படும் இரும்பு ஆர்ச் மீது வாகனங்கள் மோதுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பிற வாகனங்கள் மீதும் விழுகிறது.
குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து இரவு நேரங்களில் தூக்கக் கலக்கத்தில் வரும் கனரக வாகன ஓட்டிகள் இந்த ஆர்ச் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். போக்குவரத்து போலீஸாரும், ரயில்வே துறையினரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
எனவே வாகன ஓட்டிகள் எளிமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் அல்லது இரும்பு ஆர்ச்சை வைக்காமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.