தூங்குனது குத்தமா..? கோயிலில் திருடி விட்டு உறங்கியவர் கைது!
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் கோயில் உண்டியலில் பணத்தைத் திருடி விட்டு போதையில் தூங்கி கொள்ளையனைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் மற்றும் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு, கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கோயில் பூசாரி வந்து பார்த்த போது போலீஸ் கதவு திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மாயமாக இருந்ததும், அருகே ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோயில் பூசாரி, கோயில் நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் கூடினர்.
அப்போது உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி விசாரித்த போது, அவர் கோயில் உண்டியலைத் திருட வந்ததும், போதையில் இருந்ததால் அயர்ந்து தூங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த சின்னையன் (42) என்பதும், இவர் மீது புதுச்சேரியில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் சின்னையன் கோவையில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மது போதையில் அக்கோயில் அருகே வந்தபோது மீண்டும் திருட்டில் ஈடுபட நினைத்துள்ளனர். அப்போது இரும்பு கம்பியால் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் ரூ.8 ஆயிரம் பணத்தைத் திருடி விட்டு சின்னையன் கிளம்பியுள்ளார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் சிறிது நேரம் காத்திருந்த சின்னையன் மது போதையில் பகிர்ந்து தூங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து சின்னையனைக் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் அஜரப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.