கோயபுத்தூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு 46,494 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சியர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 46,494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்வி/ வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற உயர்த்திக்கொள்வதற்கான நிலைகளில் தங்களது நிலையினை வாய்ப்புகள் அளிக்கும் பொருட்டும் சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அடைவதை இலக்காகக் கொண்டும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 29.338 மாணாக்கர்களுக்கு, ரூ.11.73 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகைகளும், 353 நபர்களுக்கு ரூ.2178 இலட்சம் மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளும்,
423 நபர்களுக்கு ரூ.20.95 இலட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 12,586 மாணவிகளுக்கு ரூ. 79.57 இலட்சம் ஊக்கத்தொகையும்,
டாப்செட்கோ கடன் உதவித்திட்டத்தின் கீழ் 1214 பயனாளிகளுக்கு ரூ.6.09 கோடி கடன் உதவிகளும், மேல்நிலை வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவமாணவிகளுக்கு ரூ.23.89கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளும்,
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா 2300 நபர்களுக்கு ரூ.4800 கோடியில் வீட்டுமனைப் பட்டாக்களும், சீர்மரபினர் நலவாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்யப்பட்டு 280 நபர்களுக்கு சீர்மரபினர் நலவாரிய அட்டைகளும் என மொத்தம் 46494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில் திரவ எரிபொருளுடன் கூடிய தேய்ப்பு பெட்டியினை பெற்ற பயனாளி சீதா தெரிவித்ததாவது,
என்னுடைய பெயர் சீதா என்னுடைய கணவர் இறந்துவிட்டதால் என்னுடைய குடும்பத்தை நான்தான் காப்பற்றவேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். நான் துணிகளை தேய்த்து கொடுக்கும் அயர்னிங் கடை நடத்தி வருகிறேன்.
இதற்கு முன் என்னுடைய கடையில் துணிகளை தேய்ப்பதற்கு கரிப்பெட்டியினை பயன்படுத்தி வந்தேன். இப்பெட்டியில் கரியிட்டு அது எரிந்து பெட்டி சூடாகி துணிகளை தேய்ப்பதற்கு காலையில் அதிக நேரம் எடுக்கும்.
கரியின் சூடு தணிந்துவிட்டால் அப்பெட்டியினை திரும்ப சூடு செய்வதற்கு கூடுதல் நேரம் ஆகும். இதனால் என்னால் குறைவான துணிகளைதான் தேய்க்கமுடிந்தது.
எனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் திரவ எரிபொருளுடன் கூடிய விலையில்லா தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டம் குறித்து அறிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் வாயிலாக விண்ணப்பம் அளித்தேன்.
அதனைத் தொடர்ந்து தகுதியின் அடிப்படையில் எனக்கு அத்துறையின் வாயிலாக திரவ எரிபொருளுடன் கூடிய தேய்ப்பு பெட்டியினை வழங்கினார்கள்.
இதன் மூலம் தேய்ப்பு பெட்டி விரைவாக தேய்ப்பதற்கு ஏதுவாக உடனடியாக சூடாகி விடுகிறது. இதனால் என்னால் விரைவாகவும் கூடுதலான துணிகளையும் தேய்க்கமுடிகிறது. என்னுடைய அயர்னிங் கடையில் இருந்து கிடைக்கும் வருமானமும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் எங்கள் வாழ்வாதாரம் உயரும். இத்திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.