கேரளா சிறப்பு பிரிவு போலீஸ் எனக்கூறி ரூ.25 லட்சம் கொள்ளை – 4 பேர் கைது
கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயிலில் சென்ற வியாபாரியிடம், போலீஸ் எனக்கூறி ரூ.25 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை வாளையாறு போலீஸார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அபுபக்கர், மற்றும் பட்டாம்பியை சேர்ந்த பத்ரூதின் இருவரும் நகை செய்து கொடுக்கும் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் நகை செய்து கொடுத்த பணம் ரூ.25 லட்சம் வாங்கிக்கொண்டு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம் நோக்கிச் சென்றனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 5 பேர், அவர்களுடன் ரயிலில் ஏறியுள்ளனர்.
அப்போது அந்த மர்ம நபர்கள் தங்களைக் கேரளா சிறப்புப் பிரிவு போலீஸார் எனக்கூறி போலியான அடையாள அட்டையைக் காட்டி, பையைச் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது உள்ளே வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆவணங்கள் இல்லை எனக்கூறியதால் வாளையாறு ரயில் நிலையத்தில் இறங்கி, காவல் நிலையத்திற்கு வர வேண்டும் கூறியுள்ளனர்.
இதையடுத்து வாளையாறு ரயில் நிலையத்தில் இருவரையும் இறக்கி மர்ம கும்பல் அவர்களை காரில் ஏற்றிச் சென்று, சற்று தூரம் சென்றதும், பாதியில் இறக்கி விட்டு விட்டு ரூ.25 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்றனர். இது குறித்து அபுபக்கர், பக்ருதீன் ஆகிய இருவரும் வாளையாறு போலீஸில் புகார் அளித்தனர்.
புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் வாளையாறு போலீசார் தலைமறைவான கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ் (37), ராஜீவ் (34), ரஞ்சித் (28), அஜீஸ் (37) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.