கோயம்புத்தூர்தமிழ்நாடு

கேரள நகைக்கடை உரிமையாளரிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை – உரிமையாளர் கார் மீட்பு. 

கோவையில் கேரள நகைக்கடை உரிமையாளரிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நகைக்கடை உரிமையாளரின் கார் கேரள எல்லை வழுக்கல் பகுதியில் தனிப்படை காவல்துறை மீட்டு உள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் தங்க நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜெய்சன் ஜேக்கப் தனது கடை ஊழியரான விஷ்ணு என்பவர் உடன் சென்னைக்குச் சென்று 1.25 கிலோ தங்கக் கட்டிகளைத் தங்க நகை ஆபரணங்களாக மாற்றுவதற்காக வாங்கிக் கொண்டு கோவை வந்தனர்.

பின்னர் கோவையிலிருந்து காரில் கேரளா நோக்கிச் சென்றனர். அப்போது கார் தமிழ்நாடு – கேரளா எல்லையான எட்டிமடை அருகே வந்தபோது கேரளா பதிவு எண் கொண்ட லாரியை காரின் குறுக்கே நிறுத்திய மர்ம கும்ப கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று, தங்கக் கட்டிகளுடன் இருவரையும் அழைத்துச் சென்றனர்.

பின்னர் கேரளா எல்லையில் ஜெய்சன் ஜேக்கப் மற்றும் விஷ்ணு` ஆகிய இருவரை இறக்கி விட்டு விட்டு, காரில் இருந்த 1.25 கிலோ தங்கக் கட்டிகள், இரண்டு சவரன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்துடன் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் கோவை கே.ஜி சாவடி காவல்துறை வழக்குப் பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் 5 தனி படைகள் அமைத்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை எட்டிமடை அருகே கொள்ளையர்கள் பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட லாரியை காவல்துறை மீட்டனர். தொடர்ந்து கேரள எல்லையான வழுக்கல் பகுதியில் நகைக் கடை உரிமையாளரின் காரை தனிப்படை காவல்துறை மீட்டு உள்ளனர்.

வழுக்கல் பகுதியில் காரை நிறுத்திவிட்டு கொள்ளை கும்பல் தங்கக் கட்டிகள், ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தனிப்படை காவல்துறை கேரளாவில் முகாமிட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்போது தங்கக் கட்டிகளை இழந்துள்ள நகைக்கடை உரிமையாளர் ஜெய்சன் ஜேக்கப் இடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் கொள்ளை சம்பவம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!