கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் கேரளா நகைக்கடை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை – கொள்ளையர்கள் பயன்படுத்திய லாரியை தனிப்படை மீட்பு.

கோவை எட்டிமடை அருகே கேரளா நகைக்கடை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்கள் பயன்படுத்திய லாரியை தனிப்படை காவல்துறை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெய்சன் ஜேக்கப் தனது கடை ஊழியர் விஷ்ணு என்பவர் உடன் சென்னைக்குச் சென்று ஆபரணங்கள் செய்ய 1.25 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு கோவை வந்தார்.

பின்னர் நேற்று தங்கக் கட்டிகளுடன் கேரளா நோக்கி காரில் சென்றார். அப்போது எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயில் அருகே வந்த போது, லாரியை குறுக்கே நிறுத்தி மர்ம கும்ப கும்பல் தங்கக் கட்டிகளைக் காருடன் கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக கே.ஜி சாவடி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கினர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது. இந்நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கேரளா பதிவு எண் கொண்ட லாரியை தனிப்படை போலீசார் எட்டிமடை பகுதியில் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல் கேரள மாநிலம் திருச்சூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் அங்கு இரண்டு கார்களை மீட்டு அவை கொள்ளையர்கள் பயன்படுத்திய காரா என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜெய்சன் ஜேக்கப் வந்த கார் என்ன ஆனது என்பது குறித்தும் திருச்சூர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!