கோவையில் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை..!
கோவை தடாகம் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை தடாகம் வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. இதில் தடாகம் கணுவாய் சுற்றுவட்டார வனப்பகுதியிலிருந்து அடிக்கடி சிறுத்தை வெளியேறி வருகிறது.
இந்நிலையில் நேற்று தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று வன எல்லையை ஒட்டிய திருவள்ளுவர் நகர் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்றைச் சிறுத்தை வேட்டையாட முயன்றது.
சிறுத்தையிடமிருந்து தப்பிய நாய் அப்பகுதியைச் சேர்ந்த வாணி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவருக்குள் புகுந்தது. பின் தொடர்ந்து வந்த சிறுத்தையும் நாயை வேட்டையாட சுற்றுச்சுவருக்குள் புகுந்தது. ஆனால் சுதாரித்துக் கொண்ட வளர்ப்பு நாய் சிறுத்தையிடமிருந்து தப்பியது.
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே சிறுத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டின் சுற்றுச் சுவர் மீது நின்ற கோழியை வேட்டையாடி பிடித்துச் சென்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.