பேரூர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து
கோவை பேரூர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ள இருந்த கணினிகள், இருக்கைகள், உள்ளிட்ட பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை தீயில் எரிந்து நாசமானது.
கோவை சிறுவாணி சாலை பேரூர் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கரும்புகை வெளியேறியுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பேரூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். மேலும் வங்கி ஊழியர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவைப்புதூர் தீயணைப்பு மீட்புக் குழுவினர், வங்கிக்கு உள்ளே சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விசாரணையில் வங்கியிலிருந்த பேட்டரி யூனிட்டில் மின் கசிவு ஏற்பட்டுத் தீப்பிடித்ததும், இதில் பிரதான மின் பெட்டியிலும் தீ பிடித்ததால் வங்கியிலிருந்த கணிகள், இருக்கைகள், பாஸ் புக் அச்சடிக்கும் இயந்திரம், பிரிண்டர்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாகப் பேரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.