ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்!
கோயம்புத்தூர் போத்தனூர் ரயில் நிலையம் வந்த தாம்பரம் – மங்களூர் விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூர் போத்தனூர் ரயில்வே போலீஸ் ஆய்வாளர் சுனில்குமார், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் ரயில்வே குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் இணைந்து, ரயிலில் நடைபெறும் சட்ட விரோத கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரத்திலிருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை காலை 10.16 மணியளவில் போத்தனூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது சிறப்புக் குழுவினர் ரயில் பெட்டிகளில் சோதனையிட்டனர். அப்போது முன்னாள் உள்ள 2 ஆவது பொதுப்பெட்டியில் போலீஸார் சோதனையிட்ட போது அங்கு கேட்பாரற்ற தோள் பை ஒன்று இருந்துள்ளது.
ஆனால் பெட்டியில் உள்ள பயணிகள் யாரும் உரிமை கோராததால் சந்தேகமடைந்த ரயில்வே போலீஸார் அதனைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள சுமார் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீஸார் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் கஞ்சாவைக் கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.