தாயை பிரிந்த குட்டி யானை – யானைகள் முகாமில் சேர்ப்பு..!
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த மே.26 -ம் தேதி வனத்துறை ஊழியர்கள் ரோந்துச் சென்றனர். அப்போது தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று தனியாக நின்றது தெரியவந்தது.
இதையடுத்து குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதற்குப் பால் மற்றும் உணவு வழங்கினர். மேலும் தாயைப் பிரிந்த குட்டியை அதன் தாய் மற்றும் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பல முறை சிறுமுகை சுற்றுவட்டார வனப் பகுதிகளில் கண்காணித்தும் குட்டியின் தாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே கோவையில் தொடர்ந்து கனமழை பெய்ததால் குட்டி யானையை, தாயுடன் சேர்க்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து கோவை மற்றும் சிறுமுகை வனக்கோட்டங்களை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம், சக்திய மங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிகளிலும் குட்டி யானையைத் தாயுடன் சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூன்12 ( வியாழக்கிழமை ) வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள் தோல்வியடைந்தது. இதையடுத்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆகியோர் உத்தரவின் படி தாயைப் பிரிந்து குட்டி யானை முழுமையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பயன்படுத்தி, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுதி யானைகள் முகாமில் சேர்க்கப்பட்டது. அங்குள்ள பிரத்தியேக கிராலில் குடியானை உணவு வழங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.