3வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!
கோயம்புத்தூரில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி மூன்றாவது நாளாகத் தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு அரசு அறிவித்த பணி உயர்வு ரூ.770 வழங்கக் கோரியும், நீண்ட ஆண்டுகளாக பணியில் உள்ள ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் கடந்த மூன்று நாட்களாக பணியைப் புறக்கணித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது நாளான இன்று சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
இது குறித்து தூய்மை பணியாளர் ஸ்டாலின் பிரபு கூறும் போது: கோயம்புத்தூரில் நடந்த செம்மொழி மாநாட்டின் போது ரூ.80 மற்றும் ரூ.100 ஊதியத்திற்கு பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை.
அதே போல மாவட்ட ஆட்சியர் ரூ.770 ஊதியம் நிர்ணயம் செய்த நிலையில், இதுவரை அந்த ஊழியம் வழங்கப்படவில்லை. குறைந்தபட்ச அறிவிப்பு ஊதியம் கூட முறையாக வழங்கப்படுவது இல்லை. 2022 வரை வாங்கி ஊதியமும் தற்போது குறைந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மாநகராட்சியில் சுமார் ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளது. அதனை ஏன் நிர்வாகம் நிரப்புவது இல்லை.
மேலும் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி பிடித்தம் குறித்தும் தெளிவான விளக்கம் அளிப்பது இல்லை. உடனடியாக பணி நிரந்தரம், அரசு அறிவித்த ஊதிய உயர்வை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.