இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு குருநெல்லிபாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான விநாயகர், மாரியம்மன், சுப்பிரமணி திருக்கோயில்களை வைரவன் பண்டார குடும்பத்தார் பல ஆண்டுகளாகக் கோயிலில் சுமார் 25 ஏக்கரில் வரும் விளைச்சலைக் கொண்டு பூஜை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென உள்ளூர் ஆதிக்க சமூகத்தினரின் அழுத்தத்தால், அமைதி கூட்டம் என நடத்தி இந்து சமய அறநிலையத்துறையினர் பூசாரியிடம் இருந்து சாவி வாங்கியதோடு, அவர்கள் விவசாயம் செய்து வந்த சுமார் 25 ஏக்கர் நிலத்தையும் ஏலம் விட்டனர்.
நிரந்தர பூசாரியாக 1968 ல் இருந்த வட்டாட்சியர் பிறபித்த உத்தரவை மீறியும், உரிய விசாரணை நடத்தாமல் செயல்பட்ட இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சி.பி.எம். மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் கூறும் போது:
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு குருநெல்லிபாளையம் கிராமத்தில் 120 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வந்த பூசாரிகளுக்கு அப்போதைய மைசூர் மகாராஜா வழங்கிய 25 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.
குருநெல்லிபாளையம் கிராமத்தில் ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய சிலர், ஒன்று கூடி இவர்களது பூஜை உரிமையை நிராகரித்து, அமைதிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தி பலவந்தத்தாகக் கோவில் சாவியைப் பறித்துள்ளனர்.
மேலும் அதனை சம்பந்தமே இல்லாத ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர். 120 ஆண்டுகளாகப் பயிர் செய்து வந்த நிலத்தை எந்த வித விசாரணையும் இல்லாமல், வேறு ஒருவருக்கு ஏலத்தின் மூலம் ஒப்படைத்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை 68 ஆவது ஆண்டு செட்டில்மெண்ட் வட்டாட்சியரின் உத்தரவுக்கு மாறாகப் பூசை செய்து வந்த உரிமைகளை நிராகரித்துப் பயிரிட்டு வந்த நிலத்தின் உரிமைகளை நிராகரித்து அராஜகமான முறையில் ஆதிக்க சதிகளுக்குத் துணை போகியுள்ளனர்.
இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்து அறநிலையத்துறை நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டுள்ளோம். நிச்சயமாகத் தமிழ்நாடு அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.