ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தர்ணா – அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம்
ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் ஜூலை 15 -ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 96 மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காமல் உள்ளது குறித்தும், தங்களது கோரிக்கைகள் குறித்தும் விவாதித்தனர். மேலும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் அறிவித்த 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம், ஒன்றிய அரசின் ஓய்வூதியர்களுக்கான புதிய சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஸ்ணமூர்த்தி கூறும் போது: செயற்குழு கூட்டத்தில் இன்றை அரசியல் சூழ்நிலைகளைப் பரிசீலனை செய்தோம். 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்குக் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும், மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்குவோம் எனத் தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.
ஆனால் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே இதைக் கண்டித்துக் கடந்த ஏப்.22 முதல்வர் கவனத்தை ஈர்க்க சுமார் 5 ஆயிரம் ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட மாநில தழுவிய இயக்கத்தை நடத்தினோம். அதே போல ஒன்றிய அரசு நயவஞ்சகத்தனமாக ஒரு சட்டத்தை இயற்றியுள்ளனர்.
அதில் ஓய்வூதியர்களை இரண்டாகப் பிரித்து, அதில் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்குச் சலுகை இல்லை எனச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளனர். இதனைக் கண்டித்து நாடு தழுவிய இயக்கத்தை நடத்த உள்ளோம். வரும் ஜூலை 15 ஆம் தேதி மாவட்ட தலை நகரங்களில் மிகப்பெரிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
அதே போலப் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தான் எங்களது பிரதான தேவை எனக் கூறினார்.