மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் திடீரென வெடித்த சிலிண்டர் – உயிர்சேதம் தவிர்ப்பு
கோவை நீலிக்கோணாம் பாளையம் பகுதியில் வீட்டின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவர் கோவை விமான நிலையத்தில் பணி புரிந்து வருகின்றார். மாணிக்கராஜ் இன்று பிற்பகல் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார்.
இந்நிலையில் அவரது வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ் மளமளவென எரிந்தது.அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பீளமேடு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தபடி இருந்தனர். அப்போது வீட்டின் முதல் தளத்தில் இருந்த சிலிண்டர் எதிர்பாராத விதமாக பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. தீ விபத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து அங்கு இருந்து அலறி அடித்தபடி ஓடினர்.
வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் முகாமிட்டிருந்த பீளமேடு தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் தீ பரவி இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் தீ வீட்டில் பரவியதன் காரணமாக சிலிண்டர் வெடித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் நீலி கோணம் பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.