கோயம்புத்தூர்செய்திகள்

பீடம்பள்ளி கிராமத்தில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயிகள் பாதிப்பு..!

கோயம்புத்தூர் சூலூர் பீடம்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனம், கட்டுமான பணிக்காகத் தொழிற்சாலை கழிவுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோயம்புத்தூர் சூலூர் பீடம்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் தொழிற்சாலை கழிவுகள் பல லோடுகளை நிலத்தில் கொட்டி வைத்துள்ளதால், சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், உடனடியாக தொழிற்சாலை கழிவுகளை அகற்ற வேண்டும் எனக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

இதையடுத்து அங்குக் கழிவுகள் கொட்டப்படாமல் இருந்த நிலையில் மீண்டும் 2 வாரங்கள் கழித்து தொழிற்சாலை கழிவுகளை நிலத்தில் கொட்ட வாகனங்களில் எடுத்து வந்துள்ளனர். அந்த வாகனங்களைச் சிறைபிடித்த விவசாயிகள் அதனை சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் விவசாய நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள அக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்துப் பேசிய விவசாயிகள்: எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் நன்றாக உள்ளது, 10 அடி வரை கிணற்றில் நீர் உள்ளது. தொழிற்சாலை கழிவுகளைக் கொட்டி பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். அப்பகுதிகளில் இந்த கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் இந்த தொழிற்சாலை கழிவுகளைப் பயன்படுத்தக் கூடாது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே தெரிவித்துள்ளது. நேற்று அங்கு வந்த வாகனங்களைப் பிடித்துக் காவல் துறையில் ஒப்படைத்துள்ளோம். உடனடியாக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அங்குள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!