மணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது எதிரொலி – மீண்டும் வன்முறை, இணையச் சேவை துண்டிப்பு..!
மணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது – மீண்டும் அங்குப் போராட்டம் வெடித்தால் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.
மணிப்பூர் அரம்பாய் தெங்கோல் என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன்சிங் உள்ளிட்ட 5 பேரை, மத்திய பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2024-ல் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவங்களில் கனன் சிங் சந்தேகத்துக்குரிய முக்கிய நபராக உள்ளார். இவர், மாநில காவல்துறையின் கமாண்டோ பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி, பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மெய்தி இனக்குழுவின் முக்கிய தலைவராக கருதப்படும் கனன சிங் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கருப்பு நிற உடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கைகளில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் சனிக்கிழமை இரவு கைது நடவடிக்கையைக் கண்டித்து டயர்களை எரித்து சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பிஷ்ணுபூர், இம்பால் மேற்கு, இம்பல் கிழக்கு, தௌபல் மற்றும் காக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.