கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா – 2025 வரும் ஜூலை 18ஆம் தேதி துவக்கம்!
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடிசியா) இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 வரும் ஜூலை 18ஆம் தேதி துவங்க உள்ளது.
வரும் ஜூலை – 18 முதல் 27 ஆம் தேதி வரை கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 – திற்கான இலச்சினையை ( லோகோ) மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வெளியிட்டார்.
மேலும் இந்த புத்தக திருவிழாவில் 280க்கும் மேற்பட்ட அரங்குகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சியளிக்க உள்ளது. அதே போல் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், கலைஞர்களும், பிரபல தலைவர்களும் கலந்து கொள்ளும் கலை இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற உள்ளது. இலக்கியம் சார்ந்த சாதனை படைத்துள்ள சான்றோர்களில் தகுதியான ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் கூறியதாவது :
கடந்த ஆண்டு நடைபெற்ற கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் சுமார் 74 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த முறையும் 280 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. இம்முறை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு நடைபெறும் புத்தகத் திருவிழாவில் இளம் படைப்பாளர்களுக்கு விருதுகள் மற்றும் பயிற்சிகள் வழங்க உள்ளோம். அதே போல் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள், மகளிர் தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் புத்தகக் கண்காட்சியைக் காண ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மக்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதே போல் பள்ளி பா மாணவ மாணவிகளை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஆலோசிக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.