பள்ளிகள் திறப்பு: குழந்தைகள் உற்சாகம்..
கோயம்புத்தூரில் கோடை விடுமுறைக்குப் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள், கார்டூன் பொம்மைகள், பூ ஓவியங்களைக் காட்டி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் இன்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது.
குறிப்பாகக் கோவை மாவட்டத்தில் விடுமுறை முடிந்து வகுப்புகளுக்கு மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் வந்தனர். இதில் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள செயின்ட் ஜோசப், பள்ளி, செயின்ட் மேரிஸ் பள்ளி, செயின்ட் பிரான்சிஸ் பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மிக்கிமவுஸ் உட்பட பல்வேறு கார்டூன் கதாபாத்திரங்கள் உருவத்துடன் சாக்லேட் கொடுத்து மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர். சில பெற்றோர்கள் குழந்தைகளை ஆரத்தழுகி பள்ளிகளில் விட்டுச் சென்றனர்.
அதே போல விடுமுறை தினங்களை விளையாட்டு மகிழ்ச்சியாகக் கழித்த குழந்தைகள் பள்ளி திறந்ததால் பழைய மற்றும் புதிய நண்பர்கள் பார்க்கும் ஆசையில் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனர்.
தொடர்ந்து மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடனும், உறுதிமொழி எடுத்துக் கொண்டு பள்ளி நாட்களைத் துவங்கினர்.