மழை பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!
கோயம்புத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர், தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அழகிரி, இணை இயக்குநர் வேளாண்மை கிருஷ்ணவேணி, வருவாய்க் கோட்டாட்சியர் ராம்குமார், கோவிந்தன், அரசுத் துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தங்கள் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
குறிப்பாகத் தென்னையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும், வெள்ளை ஈ மற்றும் கேரளா வேர் வாடல் தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு அரசின் திட்டங்கள் மூலம் மானியம் வழங்க வேண்டும், சூறாவளிக் காற்றினால் சேதம் அடைந்த வாழைக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நீர் வழிப்பாதையிலுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் குளம், குட்டைகளைத் தூர்வாருமாறும், கொப்பரை தேங்காவிற்கு ஊக்கத் தொகை வழங்கிடவும், சாலையோரங்களிலுள்ள முட்புதர்களை அகற்றவும், தென்னை நார் கழிவுகள் மூலம் நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், காட்டுப் பன்றி தொந்தரவைக் கட்டுப்படுத்த வேண்டும், குட்டை ஆக்கிரமிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நொய்யல், கௌசிகா நதி மற்றும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கவும், சட்டபூர்வமற்ற நில அபகரிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.