இராணுவ வீரரிடம் இருந்து துப்பாக்கி, தோட்டா பறிமுதல்!
கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த இராணுவ வீரர் பையிலிருந்த துப்பாக்கி தோட்டாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (25). இவர் இந்திய இராணுவத்தில் பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்த பிரதீப்குமார். நேற்று மீண்டும் விடுமுறை முடிந்து பணிக்குச் செல்ல கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார்.
பெங்களூரு செல்லும் இன்டிகோ விமானத்திற்குச் செல்லும் போது, விமான ஊழியர்கள் பிரதீப்குமார் வைத்திருந்த கை பையைச் சோதனையிட்டனர். அப்போது அதில் துப்பாக்கியின் தோட்ட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் விமான நிலையத்திலிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து விசாரணைக்குப் பின் அவர்கள் பீளமேடு போலீசாரிடம் பிரதீப்குமாரை ஒப்படைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இராணுவத்தில் கொடுக்கும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒப்படைத்து மீண்டும் பெற வேண்டும் என்பதால் தன்னிடமிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பிரதீப் குமார் ஒப்படைத்த போது, ஒரே ஒரு தோட்டா பையில் சிக்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தோட்டாவைப் பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்கு பின் பிரதீப் குமாரை விடுவித்தனர்.