Top Storiesஅரசியல்கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் அடிப்படை பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய போராட்டம் நடத்தப்படும் – எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூரில் மோசமான சாலைகள், முறையற்ற குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்,” என முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மழை முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்கவும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக எம்எல்ஏ-க்கள், கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்), வி.பி.கந்தசாமி(சூலூர்), செல்வராஜ்(மேட்டுப்பாளையம்), அம்மன் அர்சுணன்(கோவை வடக்கு), பி.ஆர்.ஜி. அருண்குமார்(கவுண்டம்பாளையம்), தாமோதரன்(கிணத்துகடவு) ஆகியோர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (மே 26) மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியது: “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அணையின்படி, கோய்மபுத்தூர் மாவட்டத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். கோயம்புத்தூர் மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வரி விதிக்கப்படுகிறது. மின்கட்டண உயர்வு, மீண்டும் 6 சதவீத சொத்து வரி உயர்வு, சொத்துக்களுக்கும், வீடுகளுக்கும் வரி உயர்வு மட்டுமின்றி அபராத வரி விதிப்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள், குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகள் என சாலைகள் பொதுமக்கள் நடக்க முடியாத நிலையில் உள்ளன. இதுகுறித்து சட்டப்பேரவையில் கோரிக்கை முன்வைத்தோம் ஆனால் இன்று வரை அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. தற்போது பருவ மழை பெய்யும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து சாலைகளுமே பாதுகாப்பற்ற நிலையில் காட்சியளிக்கின்றன.

சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழை காலத்துக்கு முன் குளத்துக்கு வரும் வாய்க்கால்களை தூர்வாரி இருக்க வேண்டும். அதையும் சரியாக செய்யவில்லை.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

யானைகளுக்காக தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும், என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளேன்.

அரசு தரப்பில் ரூ.8 கோடி ஒதுக்குவதாக கூறினர். ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாயிகள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக மண் எடுத்ததற்கு தற்போது லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். உடனடியாக இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

கூட்டு குடிநீர் திட்டத்தில், 370 எம்எல்டி தண்ணீர் வருகிறது. நமக்கு அவ்வளவு தண்ணீர் தேவையில்லை. இருந்தபோதும் கிராமப் புறங்களில் பல இடங்களில் தண்ணீர் சீரான முறையில் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சிறுவாணி குடிநீர் மிகவும் முக்கியம். கேரளா அரசு அடிக்கடி தண்ணீரை நிறுத்தி விடுகின்றனர். அது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பீளமேடு மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏற்கெனவே மாநகராட்சி சார்பில் குப்பை மாற்று நிலையம் செயல்படுகிறது. அங்கு புதிதாக கட்டிடம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. அந்நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய அளவில் பேராட்டம் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!