கோயம்புத்தூரில் கொட்டி தீர்த்த மழை – 24 மணி நேரத்தில் 123 செ.மீ மழைப் பதிவு!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 123 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக வால்பாறை சின்ன கல்லாரில் 23 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் முக்கிய நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 123.2 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வால்பாறை சின்னக்கல்லாறு பகுதியில் 21.1 செ.மீ மழையும், சிறுவாணி அடிவாரத்தில் 12.8 செ.மீ, சிங்கோனாவில் 12.4 செ.மீ, வால்பாறை தாலுக்கா 10 செ.மீ, என மழைப் பதிவாகி உள்ளது.
மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆத்துப்பாலம் பகுதியிலுள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதன் காரணமாகப் பொதுமக்கள் தண்ணீரில் குளிக்கவும் மீன்பிடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.