குளங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
பருவமழை காரணமாக கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்படுவதை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்படுவதை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று (26.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஓரிரு நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால், மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் உபரிநீர் திறந்து விடப்பட்டு, மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (26.05.2025) தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, நொய்யல் ஆற்றில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் செல்லும் குறிச்சி அணைக்கட்டு பகுதியினை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நீரின் வரத்து குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர;ந்து, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, பேரூர் சாலை, ஆண்டிபாளையம் பிரிவு அருகில், நொய்யல் ஆற்றிலிருந்து உக்கடம் குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்காலில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்படுவதையும் மற்றும் நொய்யல் ஆற்றில் கலக்கும் சங்கனூர் பள்ளம், ராஜவாய்க்கால் ஆகிய நீர்வழித்தடங்கள் மற்றும் சிங்காநல்லூர் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் ஆகிய மூன்று நீர்வழித்தடங்கள் சந்திக்கும் இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்