வெள்ளியங்கிரி மலையேறிய பெண் உட்பட இருவர் பலி – மலையேற்றத்திற்கு தடை விதிப்பு
கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி மலை ஏறிய பெண் உட்பட இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மலையேற்றத்திற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் இன்று மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ள நிலையில், காலையிலிருந்து பூண்டி வனப்பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்குச் சென்ற காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கௌசல்யா (45), என்ற பெண் ஏழாவது மலையில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய போது திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை அங்கிருந்த வன ஊழியர்கள் மற்றும் அவசரக்கால மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதே போல் ஐந்தாவது மலையில் வந்து கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (32) என்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இருவரின் உடலையும் வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் அடிவாரத்திற்கு எடுத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்குப் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு ஏற்கனவே மேலே உள்ள பக்தர்களைக் கீழே அழைத்து வரும் பணியும் நடைபெற்று வருகிறது.