கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவி மூடல்!
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் தென்மேற்கு பருவ மழையும் முன்கூட்டியே பெய்யத் துவங்கியுள்ளது.
இதில் கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவை குற்றாலம் அருவியில் குளிக்கப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து போளூவாம்பட்டி வனத்துறையினர் கூறும் போது : கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவியில் குளிக்கச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சீரான நீர் வரத்து இருந்தால் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றாலம் அருவிக்குச் செல்லும் நுழைவு வாயிலான சாடிவயல் பகுதியில் இது குறித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.