100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு மான்கள் மீட்பு!
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அருகே விவசாயத் தோட்டத்திலிருந்த 100 அடி கிணற்றுக்குள் விழுந்த இரண்டு ஆண் மான்களைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக வியாழக்கிழமை மீட்டனர்.
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று மான்கள் புத்தூர் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் விரட்டியதால் மூன்று மான்களும் வேகமாக ஓடியது.
இதில் இரண்டு ஆண் மான்கள் அப்பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அனில்குமார், சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் வலை மூலம் இரண்டு ஆண் மான்களைக் கிணற்றில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மான்கள் வலையில் ஏற முடியாத சூழல் ஏற்பட்டதால், இரண்டு தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம் புள்ளி மான்களை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட மானை போளுவாம்பட்டி வனச்சரக வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
நீண்ட நேரம் போராடி இரண்டு புள்ளி மான்களைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.