கோயம்புத்தூர்: பெண் காட்டு யானை உயிரிழப்பு
கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் கண்டறியப்பட்ட பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை வனப்பகுதியில் நேற்று மாலை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உடல் மெலிந்த நிலையில் படித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
பின்னர் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில், கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான குழுவினர் பெண் யானைக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை வரை தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலை 11 மணி அளவில் பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து மதுக்கரை வனச்சரகர் அருண் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் இறந்த பெண் யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 45 வயதுக்கு மேல் இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. மேலும் கல்லீரல், இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ஏற்பட்ட நுண்ணுயிர் தொற்று காரணமாகவும், வயது முதிர்வின் காரணமாகவும் யானை உயிரிழந்திருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதே பகுதியில் உயிரிழந்த பெண் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருதமலை வனப் பகுதியில் நெகிழிக் கழிவை உண்ட பெண் யானை உயிரிழந்த நிலையில், மேலும் மற்றொரு பெண் யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.