கோடநாடு வழக்கு: உயிரிழந்த முதல் குற்றவாளியான கனகராஜின் உறவினரிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியான உயிரிழந்த கனகராஜின் உறவினர் ரமேஷிடம் சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி சிறப்புப் பிரிவு காவல்துறை விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் சேகரிக்கப்பட்டது.
மேலும் எஸ்டேட் மேலாளர் நடராஜன், காவலிகள், எஸ்டேட் ஊழியர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகள், வளர்ப்பு மகன் சுதாகரன் உள்ளிட்ட சுமார் 300 பேரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் கனகராஜ் விபத்தில் உயிரிழப்பதற்கு முன் சுமார் 4 மணி நேரம் அவரது உறவினர் ரமேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். மேலும் அப்போது நடந்த செல்போன் உரையாடல்களை ரமேஷ் அளித்துள்ளார். இதன் காரணமாகக் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரமேஷ் சேர்க்கப்பட்டார்.
இதுவரை 2 முறை சிபிசிஐடி காவல்துறை நேரில் அழைத்து விசாரித்த நிலையில் மூன்றாவது முறையாக ரமேஷுக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் வழங்கினர். அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ரமேஷ் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக மேலும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 14 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.