நிதி ஆயோக் கூட்டத்தில் அதிமுக-வினர் குடும்ப கதையா பேசினார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி
நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்று கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக வினர் குடும்ப கதையா? பேசிக் கொண்டிருந்தனர் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் , பன்னீர் விற்பனை மையத்தினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது: கோயம்புத்தூரில் பன்னீர் சார்ந்த பொருட்கள் விற்பனை மையம் வேண்டும் எனப் பொதுமக்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஆவின் பொருட்கள் எந்த தடையும் இன்றி கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
டிலைட் பால் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது டிலைட் பால் பெரிய அளவு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. டிலைட் பால் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது.
ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிர்வாகம் கையாள்கிறது. குற்றச்சாட்டுகள் ஏதாவது இருந்தால், கவனத்திற்குக் கொண்டு வந்தால் உடனடியாக சரி செய்யப்படும். 40 லட்சம் லிட்டர் என்ற இலக்கை ஆவினுக்கு நிர்ணயித்திருக்கிறோம். விரைவில் அந்த இலக்கை அடைவோம். விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
ஆண்டு முழுவதும் சீரான விலையை ஆவின் கொடுத்து வருகிறது. எல்லா நேரத்திலும் ஆவினால் விநியோகம் செய்ய முடியும். பேரிடர் காலங்களில் ஆவின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் மழை பாதிப்பின் போது சிறப்பாகச் செயல்பட்டோம். ஆவின் பால் விலை நிரந்தரமானது. நிதி ஆயோக் கூட்டம் குறித்து முதல்வர் தெளிவாகக் கருத்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டிற்கான உரிமைகளை வலுவாகப் பேசி தருவேன் என்று சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தின் நலன் எந்த இடத்திலும் , எந்த சூழலிலும் சமரசம் செய்யப்படாது. கடந்த ஆட்சிக் காலத்திலிருந்த நிலை இருக்காது என்பதை முதல்வர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ED சோதனைக்குப் பயந்து டெல்லி சென்று இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து இருப்பது குறித்த கேள்விக்கு,
இதைச் சொல்வதற்கு எடப்பாடி வெட்கப்பட வேண்டும். நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று குடும்ப கதையைப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், அதிமுக ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளாக குடும்ப கதையைத்தான் பேசிக் கொண்டு இருந்தார்களா? எனக் கேள்வி எழுப்பினார்