கோயம்புத்தூர்செய்திகள்

ரூ.3000 கோடி வந்திருப்பதாக கூறி ரியல் எஸ்டேட்  அதிபரிடம் ரூ.3 கோடி மோசடி – சாமியார் கைது


அறக்கட்டளைக்கு ரூ.3 ஆயிரம் கோடி வந்திருப்பதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த, கேரளா மாநில சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் பீளமேட்டைச் சேர்ந்தவர் கமலேஸ்வரன் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்குக் கேரளா மாநிலம் முத்துலமாட போஸ்ட் கம்பரத்து சாலா பகுதியைச் சேர்ந்த சினேகம் என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் சுனில் தாஸ் (63) என்கிற சாமியார் அறிமுகமாகி உள்ளார்.

அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலேஸ்வரனிடம் தனது அறக்கட்டளைக்கு ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.3.17 ஆயிரம் கோடி சேங்சன் ஆகியிருப்பதாகவும், ரூ.3 கோடி கடன் கொடுத்தால் அதனை வாங்கி பணத்தைத் திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து வந்ததாகப் போலியாகத் தயார் செய்த ஒரு கடிதத்தைக் காட்டி உள்ளார். இதனைப் பார்த்து உண்மை என நினைத்து உதவி செய்ய முன்வந்த கமலேஸ்வரன் ரூ. 1 கோடியே 56 லட்சத்து 85 ஆயிரத்தை வங்கி மூலமும், ரூ. 1 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்தை ரொக்கமாகவும் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் பல மாதங்களாகியும் சுனில் தாஸ் பணத்தைத் திருப்பி தரவில்லை. பணம் குறித்துக் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கமலேஸ்வரன் இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ சரத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில் சுனில் தாஸ் மோசடி பேர்வழி என்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சுனில் தாசைத் தேடி வந்தனர். அப்போது அவர் மதுரையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மதுரை விரைந்து சென்று அங்குப் பதுங்கி இருந்த சுனில் தாசைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோயம்புத்தூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!