பிரத்தியேக உடை அணிந்து ரூ.70 லட்சம் பணம், தங்கம் கடத்தல்..!
கோவையிலிருந்து பிரத்தியேக உடையை அணிந்து ரூ.70 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தைக் கடத்திச் சென்ற மூவரைக் கேரளா போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாகக் கேரள மாநிலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை கேரளம் எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் பாலக்காடு மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கி வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களைச் சோதனை செய்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் உடைக்குள், பிரத்தியேக உடை ஒன்றை அணிந்து, அதில் கட்டுக் கட்டாகப் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் முழுமையாகச் சோதனையிட்டபோது அதில் ரூ.71 லட்சம் பணம் மற்றும் மற்றொருவரிடம் 200 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் தங்கத்தைக் கடத்தி வந்தவர்கள் கோவை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்த மோகன் மகன் சாகர் (32), இவரது சகோதரர் சந்தீப் (35), கோவை ராஜவீதியை சேர்ந்த சந்திரன் மகன் மணிகண்டன் (40) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் கோவையில் தங்க நகை வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் எங்கிருந்து பணம் வாங்கி வந்தார்கள், யாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரத்தியேக உடையில் ரூ.71 லட்சம் பணம் மற்றும் தங்கத்தைக் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.