உடல் நலக்குறைவால் சிகிச்சையிலிருந்த பெண் காட்டு யானை உயிரிழப்பு!
கோயம்புத்தூர் மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவுடன் கடந்த 4 நாட்களாகத் தொடர் சிகிச்சையிலிருந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம், மருதமலை வனப்பகுதியில் கடந்த மே.16 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானையை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து கால்நடை மருத்துவர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து காட்டு யானைக்கு இரவு, பகலாகச் சிகிச்சை அளிக்கும் பணியைத் துவங்கினர்.
முதல் கட்டமாகக் காட்டு யானையை கிரேன் உதவியுடன் நிற்க வைத்து அதற்கு குளுக்கோஸ் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளைச் செலுத்தி வந்தனர். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாகக் காட்டு யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் நான்காவது நாளான இன்று, ஐந்து கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், வனப்பகுதியில் தற்காலிக குட்டை அமைக்கப்பட்டது.
பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானை குட்டைக்குள் இறக்கப்பட்டு “ஹைட்ரோ தெரபி” சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென யானையை மயங்கியதால் கிரேன் மூலம் யானையை மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது.
அப்போது உடல் நிலையில் திடீரென மோசமான நிலையில், யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.