கோயம்புத்தூர்செய்திகள்

மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை!

கோயம்புத்தூர் மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் கண்டறியப்பட்ட பெண் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்கும் பணியைச் சனிக்கிழமை துவங்கினர்.

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை வனப்பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் தடாகம் பள்ளத்தாக்கு வழியாகச் சென்று வருகிறது.

இதில் மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் சோமையம்பாளையம் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கிற்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

அவ்வாறு வரும் காட்டு யானைகள் குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளையும் உட்கொள்கிறது. இந்த நிலையில் கோயம்புத்தூர் வனச்சரக வனத்துறை ஊழியர்கள் மருதமலை வனப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனர்.

அப்போது வன எல்லையை ஒட்டிய பகுதியில் உடல் நலக்குறைவுடன் பெண் யானை மற்றும் அதன் குட்டி யானை நின்று சத்தம் போட்டது தெரியவந்தது. இதுகுறித்து வன ஊழியர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் குழுவுடன் அங்கு வந்த வனத்துறையினர் பார்த்தபோது உடல் நலக்குறைவால் இருந்த யானை அங்கேயே படுத்துக் கொண்டது. அதன் அருகே சுமார் ஒரு வயது நிரம்பிய குட்டி யானை இருப்பதால் யானையின் அருகே நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

மேலும் மாலை நேரம் என்பதால் மற்ற காட்டு யானைகள் ஆங்காங்கே வரத் துவங்கியது.  இதனால் யானைக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு உடல் நலக்குறைவால் உள்ள பெண் யானைக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!