கோடை வெயிலை சமாளிக்க காவலர்களுக்கு ஃபேன் வைத்த தலைக்கவசம்..!
கோயம்புத்தூர் மாநகரில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்களுக்கு , கோடை வெயிலைச் சமாளிக்கும் வகையில் தனியார் நிறுவன சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்புடன் பேட்டரி, ஃபேன், கன்ட்ரோல் யூனிட்டுடான தலை கவசம் வழங்கப்பட்டது. ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தலைக் கவசத்தை முதல் கட்டமாக 36 காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் வழங்கினார்.
இது குறித்து காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறும் போது: கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த தலைக் கவசத்தின் மூலம் 5 சதவீத வெப்பம் குறைக்கப்படுகிறது. மேலும் கோவை மாநகரில் உள்ள பீட் காவலர்களுக்கான பகுதிகள் மாற்றப்பட்டுள்ளது.
மாநகரில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்பாகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுந்தராபுரம் பகுதியில் 3 சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது கூடுதலான பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போத்தனூர் இளைஞர் கொலை வழக்கில் 4 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். இதில் போதை ஊசி பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர். ஆனால் அறிக்கை வந்த பிறகு தான் முழு விபரங்கள் தெரியவரும் என கூறினார்.