பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டணை விதிப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு, 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை சிபிஐ க்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஹேரான்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கோயம்புத்தூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் மேலும் 7 பெண்கள் புகார்தாரராகச் சேர்க்கப்பட்டனர். மேலும் செல்போன் வீடியோ காட்சிகள், மடிக் கணினிகள் என பல்வேறு டிஜிட்டல் ஆதாரங்கள் சிபிஐ அதிகாரிகள் சேகரித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
மொத்தம் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. 3 முறை 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
முன்னதாக சபரி ராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற வளாகம் முழுவதும் துணை ஆணையர் தேவநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வழக்கு தொடர்பான நபர்கள், வழக்கறிஞர்கள், சிபிஐ அதிகாரிகள், காவல் துறையினர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் காலை 10.30 மணியளவில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் கோரினர். இந்நிலையில் மதியம் 12.45 மணியளவில் பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய சிபிஐ தரப்பு அரசு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறியதாவது :
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் உள்ள ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டு சாட்சியளித்த பெண்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ.85 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் சிறப்பாக முன்வைக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஐ விசாரணை துவங்கியது முதல் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய வகையில் வழக்கு நடத்தப்பட்டது.
முதல் குற்றவாளியான சபரி ராஜன்- 4 ஆயுள், திருநாவுக்கரசர்- 5 ஆயுள், சதீஷ் மூன்று ஆயுள், வசந்தகுமார் இரண்டு ஆயுள், மணிவண்ணன் ஐந்து ஆயுள், பாபு ஒரு ஆயுள், ஹெரன்பால் மூன்று ஆயுள், அருளானந்தம் ஒரு ஆயுள், அருண்குமார் ஒரு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.