கோடையை சமாளிக்க புதிய Idea வந்தாச்சு..!
கோடை வெயிலைச் சமாளிக்கும் வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கண்டுபிடித்துள்ள “பை வடிவிலான குடை” மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள அதிகளவு நீர் ஆகாரங்கள், பழ வகைகளை எடுத்துக் கொள்கின்றனர்.
இருப்பினும் பொது இடங்களுக்கும், பணிக்குச் செல்லும் இடங்களிலும் வெயிலிலேயே காய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கோடை வெயிலில் தற்காத்துக் கொள்ள இரு சக்கர வாகனத்துடன் பொருத்திக் கொள்ளும் வகையிலான நிழற்குடை, போன்று சிலர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் பை போன்ற வடிவிலான குடையைத் தயாரித்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த விஷ்ணு (27) என்ற இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்துள்ளார். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள், தொழிலாளர்களுக்காக வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் புதிய வகையிலான குடையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பட்டப்படிப்பை முடித்த பின்னர் கோயம்புத்தூரிலேயே தங்கி தனது கண்டுபிடிப்பைத் தொடர்ந்துள்ளார். சுமார் 70 வகைகளில் குடையைத் தயாரித்த நிலையில் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் முடிந்துள்ளது. இறுதியாக கண்டுபிடித்த “ஐபிரில்லா” என்ற வகை குடை வெற்றிகரமாகச் செய்துள்ளார். இதற்கான காப்புரிமையைப் பெற்ற விஷ்ணு, “மேக் இன் இந்தியா திட்டத்தின்” கீழ் தன்னை தொழில்முனைவோராகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.
இவர் கண்டுபிடித்துள்ள இந்த “பை வடிவிலான குடை” 1.2 கிலோ எடை, காற்றில் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார். மேலும் இதனைப் போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனத்தையும் ஓட்டிச் செல்லலாம். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது 50 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள், தூய்மை பணியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் இந்த குடையை எடுத்துச் செல்லும் மக்களுக்குக் கூச்சமாக இருக்கும் அது இயல்பு தான் ஆனால் நடைமுறைக்கு வந்து விட்டால் அனைவரும் இக்குடையைப் பயன்படுத்துவார்கள், சிறுவர்களுக்கு எனத் தனியாகவும், 17 வயதுக்கு மேம் உள்ளவர்களுக்குத் தனியாக குடை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.