வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டிடத்தில் ஆண் சடலம்!
கோயம்புத்தூர் வெள்ளலூரில் மாநகராட்சியால் கைவிடப்பட்ட பேருந்து நிலைய கட்டிடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கக் கட்டிடப் பணிகள் நடைபெற்றது. ஆனால் பேருந்து நிலையம் அமைய ஏதுவான சூழல் இல்லை எனக்கூறி பணிகள் கைவிடப்பட்டது.
மேலும் அங்குக் காய்கறி சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்டிடம் காலியாக இருந்ததால் அங்கு இரவில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் நடைப் பயிற்சி பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போலச் சிலர் நடைப் பயிற்சி சென்றனர்.
அப்போது அங்குத் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்குச் சென்று பார்த்த போது கைகள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் போத்தனூர் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு அழுகிய நிலையிலிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோப்பநாய் உதவியுடன் அங்குச் சோதனை மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நபர் யார் ? எதற்காகக் கொலை செய்யப்பட்டார் ? அல்லது என்ன காரணம் ? என்பது குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.