தாயைப் பிரிந்த குட்டி யானை – முதுமலை யானை முகாமிற்கு அனுப்பி வைப்பு
கோயம்புத்தூர் எட்டிமடை வனப்பகுதியில் தாயைப் பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானையை முதுமலை யானை முகாமிற்கு வனத்துறையினர் அனுப்பினர்.
கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை, எட்டிமடை வனப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது எட்டிமடை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குட்டி யானை ஒன்று தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ட வனத்துறை ஊழியர்கள் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜூக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரகர் அருண் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையைத் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 5 முறை குட்டி யானையுடன் சேர்க்க முயன்ற நிலையில் இரண்டு முறை தாய் யானை குட்டி அருகே வந்து, பின்னர் அழைத்துச் செல்லாமல் விலகிச் சென்றது. இதனால் ஒரு மாத குட்டி என்பதால் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா உத்தரவின் பேரில், எட்டிமடை வனப்பகுதியில் மீட்கப்பட்ட ஒரு மாத குட்டி யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக குட்டி யானையின் உடல் நிலை குறித்து கால் நடை மருத்துவ அலுவலர் சுகுமார் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குட்டி யானைக்குப் பால் மற்றும் உணவு கொடுக்கப்பட்டது