உயர்கல்வி வழிகாட்டுதல்: 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதை 100 சதவீதம் உறுதி செய்யும் பொருட்டு, நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர உதவும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாகக் கல்லூரி படிப்புகள், கல்லூரிகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்காகவும், உயர் கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வைப் பெறும் பொருட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி, பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரி, காரமடை ஆா்வி கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் கல்வி நிறுவனம், உக்கடம் பெரியகுளத்தில் உள்ள மாநகராட்சி பயிற்சி மையம் ஆகிய இடங்களில் இந்தக் கல்லூரிக் கனவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் படிப்புகள் சார்ந்த விவரங்களையும், நான் முதல்வன் திட்டத்தின் முக்கியத்துவம், கல்விக் கடன் சார்ந்த விவரங்கள், விருப்பமான கல்லூரியை, பாடப் பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களையும், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களையும் வழங்கவுள்ளனர்.
மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவா்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா்.