தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!
தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காலை முடிவுகளை வெளியிட்டார்.
தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதியதில் 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 26,877 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் தேர்ச்சியுடன் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.