மத நல்லிணக்கம்: பால்குடம் ஏந்தி வந்த பக்தர்களுக்கு தண்ணீர், பழங்கள் கொடுக்கும் இஸ்லாமியர்கள்..!
கோயம்புத்தூர் கரும்புக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர், பழங்கள் கொடுத்து வரவேற்றனர்.
கோயம்புத்தூர் கரும்புக்கடை பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 32 வது ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை வைத்து பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். கரும்புக்கடையில் இருந்து சாரமேடு வழியாக நஞ்சுண்டாபுரம் வரை பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்நிலையில் சாரமேடு அருகே வந்தபோது அப்பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் ஹூதா பள்ளி வாசல் சார்பிலும், ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பால்குடம் மற்றும் பூச்சட்டி ஏந்தி வரும் பக்தர்களுக்குத் தண்ணீர், பிஸ்கட், பழங்கள் கொடுத்து வரவேற்றனர். மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உடலில் தண்ணீரை ஊற்றி அனுப்பி வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இதே போல் இந்துக்கள் திருவிழாவின் போது பூச்சட்டி, கரகம் ஏந்தி செல்லும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும், நிலையில் இந்த ஆண்டும் இந்து பக்தர்களை இஸ்லாமியர்கள் வரவேற்றது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.