5 வயது சிறுமியை நாயை விட்டுக் கடிக்க வைத்த பெண் கைது..!
கோயம்புத்த்தூர், புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உள்ளது. இதில் அங்குள்ள எல் பிளாக்கில் பொன்வேல்(33) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
உணவகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் இவருக்கு 5 வயதில் மகள் மற்றும் 7 மாதத்தில் குழந்தை உள்ளது. மகள், அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் வசிக்கும் வீடு அருகில் கண்ணன் என்பவரது மனைவி சௌமியா(50) என்பவர் அவரது மகன்கள் சூர்யா மற்றும் சாந்தராம் பிரகாஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். சௌமியா வீட்டில் 4 நாய்களை வளர்த்து வந்து உள்ளார்.
இவர் வளர்த்த நாய்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு சிலரைக் கடித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். ஆனாலும் சௌமியா தொடர்ந்து நாய்களுக்கு உணவு அளித்து வீட்டிற்குள்ளேயே வளர்த்து வந்து உள்ளார்.
சம்பவத்தன்று, பொன்வேலின் மகள் வீட்டு அருகில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது சௌமியா அவரை வேறு இடத்திற்குச் சென்று விளையாடும் படி கூறியுள்ளார். தொடர்ந்து அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது சௌமியா வீட்டில் வளர்த்த நாயை விட்டு அவரை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டினர். பிறகு இது குறித்து பொன்வேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனே விரைந்து வந்து சௌமியாவிடம் நாயை விட்டு மகளைக் கடிக்க வைத்தது குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சௌமியா அவரை திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பொன்வேல் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நிலையில். பிறகு சௌமியா மற்றும் மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் சௌமியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சிறுமியை கடித்த நாய் குறித்து ப்ளூ கிராஸ் அமைப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சிறுமியைக் கடித்த நாய் மேலும் சிலரை கடித்து உள்ளது என்பதால், அந்த நாயை அங்கிருந்து கொண்டு சென்று தனியாகப் பராமரித்து அதைக் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அம்மன் குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது