கோயம்புத்தூர்: சூறைக் காற்றுடன் திடீரென பெய்த கனமழை!
கடந்த ஒன்றரை மாதமாகக் கோவையில் நிலவிய கடும் வெப்பத்திற்கு இடையே, தற்போது பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
காந்திபுரம்,சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, சரவணம்பட்டி, கணபதி, ஆர்.எஸ். புரம், கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், சங்கனூர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். பலத்த காற்றின் காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து உள்ளது.
இருப்பினும், நீண்ட நாட்களாக வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த கோயம்புத்தூர் மக்கள் இந்த கன மழையினால் பெரும் நிம்மதி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில், தற்போது பெய்த இந்த மழை குளிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.