பண்ணை வீடுகள், கிராமப்புற வீடுகளுக்கான பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு!
கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் கிராமப்புற வீடுகளுக்கான பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்குடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆலோசனையின் பேரில், புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் தனியார் வீடுகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (03.05.2025) வடக்கிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பண்ணை வீடுகள் மற்றும் கிராமப்புற வீடுகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பங்கேற்று, பொதுமக்களுக்கு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
அதில் பண்ணை மற்றும் கிராமப்புற வீடுகளில்: சிசிடிவி கேமரா பொருத்துதல், கதவுகளில் எச்சரிக்கை அலாரம் அமைத்தல், பாதுகாப்பிற்காக நாய் வளர்த்தல், சந்தேகத்திற்கிடமான நபர்கள் பார்வையில் பட்டால் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினார்.
மேலும், “KAVAL UDHAVI” எனும் காவல் உதவி செயலியின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். KAVAL UDHAVI செயலியின் மூலம்: காவல் நிலையங்களின் இருப்பிடம் அறிதல், அவசர எச்சரிக்கை தகவல்களை அனுப்புதல்,
புகார்களைப் பதிவு செய்தல், FIR விவரங்கள் மற்றும் காணாமல் போன ஆவணங்களைப் பற்றிய தகவல்கள் பெறுதல்
போன்ற பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெறுவதை அவர் எடுத்துக்கூறினார்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் “ KAVAL UDHAVI” எனத் தேடி செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு பொதுமக்களுக்குக் கேட்டுக்கொண்டார்.
மாவட்டத்தின் அனைத்து காவல் உட்கோட்டங்களில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்