அரசியல்தமிழ்நாடு

தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது – மு.பெ.சாமிநாதன்

தமிழகத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைப்பதற்குத் தொடர்பாக வணிகர்களுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது எனத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் வ உ சி மைதானத்தில் அரசு பொருட்காட்சியைத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் 31 அரசுத் துறைகளின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகளில் செய்துள்ள சாதனைகள் விளக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியானது இன்று துவங்கி வரும் ஜூன் 14 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்குப் பெரியவர்களுக்கு ரூ.15 சிறுவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும் போது :

கோயம்புத்தூரில் திறக்கப்பட்டுள்ள இந்த அரசு பொருட்காட்சியில் அரசுடைய 31 துறைகளுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடந்த ஆண்டு எவ்வாறு வரவேற்பு கொடுத்தார்களோ அதே போல இந்த ஆண்டும் வரவேற்பு கொடுக்க வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கண்காட்சியில் அரசினுடைய திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். கடந்தாண்டு நடந்த பொருட்காட்சியில் ரூ.1.68 லட்சம் பேர் இந்த பொருட்காட்சியைக் கண்டிருந்தனர்.

அதனால் அரசுக்கு வருவாயும் ஈட்டப்பட்டு இருந்தது. அதேபோன்று இந்த ஆண்டும் அதைவிடக் கூடுதலாக மக்கள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்ப் பெயர்ப் பலகை தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழ்ப் பெயர்ப் பலகை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலத்திலிருந்த பெயர்ப் பலகைகளை எடுத்துவிட்டு முறையாகத் தமிழில், அரசு வழிகாட்டுதல் படி பெயர்ப் பலகையை வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல, தற்போது ரூ 2 ஆயிரம் வரை அபராத கட்டணம் விதிக்கப்படுகிறது.

இதைத் தமிழ் வளர்ச்சித் துறை கண்காணித்துச் சுட்டிக்காட்டுகிறது. தலைமைச் செயலாளர், காணொளி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார்கள், இதில் படிப்படியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என நம்புகிறோம்.

இதை மக்களாகவே உணர்ந்து செயல்படுத்த வேண்டும், அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது, வரப்போகிற காலத்தில் அதற்கான நிச்சயமான காலக்கோடு விதிக்கப்படும்.

கர்நாடக மாநிலத்திற்குச் சென்றால் அங்கு முதலில் கன்னடம் எழுதப்பட்டு இருக்கும் அதற்குப் பிறகு தான் மற்ற மொழிகள் எழுதப்பட்டு இருக்கும், அதுபோன்ற ஒரு சூழ்நிலை தமிழகத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!