நாளை முதல் அரசுப் பொருட்காட்சி தொடக்கம்: முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோயம்புத்தூர் மாவட்டம். வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், அரசுப் பொருட்காட்சி நாளை (01.05.25) தொடங்கவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை இன்று(30.04.25) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருபவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்ததாவது:
கோயம்புத்தூர் மாநகரில் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை, அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசுப் பொருட்காட்சி நாளை(01.05.25) தொடங்கப்பட்டுத் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த அரசுப் பொருட்காட்சியில் 26 அரசுத் துறைகளும், 7 அரசு சார்பு நிறுவனங்கள் (Govt undertakings) என 33 அரசுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு, அத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பொதுமக்கள் அறிந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியானது தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். அரசுப் பொருட்காட்சி நுழைவுக் கட்டணமாகப் பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறுவர்களுக்கு ரூ.10/-ம், பள்ளி சார்பாக அழைத்துவரப்படும் மாணவ-மாணவியருக்கு ரூ.5-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பொருட்காட்சி அரசு துறைகளின் அரங்குகள் மட்டுமின்றி கோடைக் காலத்தைப் பொதுமக்கள் பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப்பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்தார்.