மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது!
கோயம்புத்தூர், குனியமுத்தூர் அருகே குடிபோதையில் வீட்டில் தகராறு செய்த மகனை, தொழிலாளி வெட்டிக் கொலை செய்தார்.
கோயம்புத்தூர் மாநகர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). உணவகத் தொழிலாளி. இவரது மகன் விஜயகுமார் ( 28). இவர் லேத்பட்டறையில் பணியாற்றி வந்தார். மேலும் விஜயகுமாருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் காரணமாக விஜயகுமாருக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். மேலும் விஜயகுமார் மது குடித்து விட்டு தகராற்றிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே வியாழக்கிழமை இரவு வழக்கம் போல விஜயகுமார் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் விஜயகுமாருக்கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து விஜயகுமாரைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வந்த குனியமுத்தூர் காவல்துறை சம்பவத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இறந்த விஜயகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விஸ்வநாதனைக் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.