Top Storiesஇந்தியாதமிழ்நாடு

மாநில சுயாட்சியை உறுதி செய்ய புதிய உயர்நிலைக் குழு – முதலமைச்சர் அறிவிப்பு

மாநில உரிமைகளை மீட்டெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்நிலைக் குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை:

தொடர்ந்து மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில், கூட்டாட்சிக் கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகளை, அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும், உயர்நிலைக் குழு ஒன்றினை அமைப்பதென்பது மிக, மிக அவசியமாக வந்திருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற I.A.S. அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டியும், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதனும் இருப்பார்கள்.

இந்த உயர்நிலைக் குழு, பின்வரும் கொள்கைகள் குறித்து ஆய்வை நடத்தும் என்றும் அறிவிக்கிறேன். ஒன்றிய -மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும்

ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்;

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல்; மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்;

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்;

1971-இல் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு மற்றும் மத்திய-மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்தில்கொள்ளுதல் வேண்டும். இவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும்.

உயர்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையைப் ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு மற்றும் நிதிப் பகிர்வை நாம் வலியுறுத்துவது தமிழ்நாட்டின் நலன் கருதி மட்டுமல்ல, பரந்து விரிந்த இந்திய திருநாட்டில் உள்ள குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை, காஷ்மீர் முதல் கேரளம் வரை அனைத்து மாநிலங்களின் நலன் கருதியே நாம் நம்முடைய வாதங்களை முன் வைக்கிறோம். மாநில சுயாட்சி குறித்த விவாதங்களில் முதல் குரல் என்றுமே தமிழ்நாட்டில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும்.

அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில், மக்களாட்சிக் கருத்தியலை சூழ்ந்து இருக்கும் கருமேகங்களுக்கிடையே தெளிவான ஒளி பாய்ச்சிட, காலம் நம்மை அழைக்கிறது. தேவை எழும்போதெல்லாம் நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இந்த முறையும் தன்னுடைய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிட முன் வருகிறது.

வளம் செழிக்கும் மாநிலங்களே, வலிமையான நாட்டினை உருவாக்கிடும் என்ற தெளிவோடு, பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் முன்வைத்த “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி” எனும் முழக்கத்தினை செயல்படுத்தி மக்களாட்சி தத்துவத்தினை இந்தியத் திருநாட்டில் முழுமையாக மலரச் செய்வோம்! என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!