குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் – பொதுமக்கள் கவனம்
கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில் குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டுப் பன்றிகளை கண்டு சத்தம் எழுப்பிய நாய்கள் – குச்சியுடன் காட்டுப்பன்றிகள் துரத்திச் சென்ற நபர் – சிசிடிவி காட்சிகள் வைரல்.
கோயம்புத்தூர் மாவட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தண்ணீர், உணவைத் தேடி அடிக்கடி காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி செல்கிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் வனப்பகுதி வறண்டு காணப்படுவதால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குப் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகரப் பகுதியான வடவள்ளி, தில்லை நகர்ப் பகுதியில் குட்டிகளுடன் புகுந்த காட்டுப் பன்றிகளைக் கண்ட அந்த வீதியிலிருந்த நாய்கள் குலைத்து, சத்தம் எழுப்பியது. இதனைக் கண்ட ஒருவர் குச்சியுடன் காட்டுப் பன்றிகளை விரட்டச் சென்றார். இதனைக் கண்ட அந்தக் காட்டுப் பன்றிகள், அங்கு இருந்து மீண்டும் திரும்பி வனப் பகுதியை நோக்கிச் சென்றது. இந்த காட்சிகள் அந்தப் பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து அப்பகுதியில் தனியாகவும், இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை பதிவும் வைரலாகி வருகிறது.